எதனை பரிசென தருவது?

புதிதாய் வாங்கிய கேமராவில்
முதல் படம் உன்னைத்தான் எடுக்கவேண்டுமென
நீ கேட்டுக்கொண்ட போதும்,
நான் படமெடுத்தது
உன் நிழலை.

என் பிறந்தநாளுக்கு,
கடையில் நீ வாங்கித்தரும் பரிசுகளை மறுத்து
உன்னிடம் நான் கேட்டுப் பெற்றது
உன் கைக்குட்டையை.

இயற்கை பின்புலங்களில் எடுத்த
உன் வண்ணப்படங்களை நீ நீட்டியபோதும்
எல்லாம் ஒதுக்கி, நான் விரும்பி வாங்கியது
கிராமத்தில் பாட்டிகளோடு நீ நிற்கும்
அந்த பழைய படத்தை.

‘நான்’ எனும் தலைப்போடு
என்னறைச் சுவரில்
தொங்கும் உன் நிழல் (படம்)…

என் கவிதைகளில்
உனக்கு மிகப் பிடித்ததொன்றை
பூத்தையலில் இழைத்து வைத்த
அந்த வெள்ளை கைக்குட்டை…

உன்னை வரைவதற்காகவே ஓவியம் பழகி
பென்சிலில் வரைந்த, பாட்டிகள் இல்லாத
உன் கருப்புவெள்ளைச் சித்திரம்…

இவற்றில் எதனை பரிசென தருவது?
நாளைய உன் திருமணத்திற்கு.

காதலும் கடைசியுமாக

பார்வைகளை எனக்களித்துவிட்டு
வெறும் கண்களை மட்டும் வைத்துக்கொண்டு
என்ன செய்வான்?

எப்பொழுதும் கண்களையேப் பார்க்கிறானே
என்னைக் காதலிக்கிறானா?
கண்ணைக் காதலிக்கிறானா?

தினமும் பார்வையை வாங்கிக்கொண்டு
வெட்கத்தைக் கொடுக்கிறேன்.
மறுநாள் சந்திப்பிலோ வாங்கிய பார்வை அவனிடமும்
கொடுத்த வெட்கம் என்னிடமுமே மிஞ்சுகிறது.

ஒரே ஒரு முத்தமென்று கெஞ்சுகிறான்.
என்னிடம் இதழ்வசம் முத்தமே இல்லை.
இவனே கடன் கொடுத்தால்தான் என்ன?

என்ன சொன்னாலும் தலையாட்டுகிறவனை சீண்டுவதற்காகவே
‘சண்டை போடலாமா?’ என்று கேட்டால்…
‘சண்டையெல்லாம் கூடாது’ என்று சண்டைக்கு வராமல்
அதற்கும் ‘சரி’யென்று தலையாட்டுகிறவனிடம் எப்படி சண்டை போட?

என்ன சொல்ல.. என்ன சொல்ல.!

மழலைத் தமிழ் பேசுகிற போது
தமிழ்ச் சோலை மலர்த்தோட்டத்துள்
கொய்து குவித்து வைத்துள்ள
பூக்கள் மேல் புரண்டெழும் உணர்வு.

நீ செய்யும் குறும்பில்-என்
குழப்பம் தொலைந்து போகும்.

உன் சிரிப்பலையில்-என்
சிந்தனை அமிழ்ந்து போகும்.

உன் பார்வை ஒன்று போதும்
பனித்துகள்களாய் நான் மாற.

உன் முத்தப்பதிப்பில்-என்
கருப்பை உன் சுகம் அறியும்.

உன் மென்மையான அம்மா எனும்
உதட்டசைவில் என் மேனியில்
கோடி முத்தங்கள் பதிந்தெழும் உணர்வு.

மனசின் வழி..

இரவின் நிழலாய்
நீள்கிறது விழிப்பு.

கதவுகளற்ற
யன்னல் கம்பிகளினூடே
ஒளிரும் விழிகளுடன்
கரும் பூனை ஒன்று
பாய்ந்து மறைகிறது.

கண்களை மூடுகையில்
இனம்காணமுடியா
சின்னதும் பெரியதுமாய்
மீன்குஞ்சுகள்
நீந்திப்பரவுகிறது.

குருவி ஒன்றின்
கீத ஒலி
ஸ்வரசச்ரமாய்
இறங்குகிறது உடலுள்.

உணர்வுகள் தோறும்
மெதுமெதுவாய்
பூக்கள் முகையவிழும் ஓசை

எரிவுடன்
விழிவழியே
திரள்கிறது கண்ணீர்.

போர்வையை
ஒருக்கழித்து எழும்புகையில்
வானத்தில் விடிவெள்ளி.

வைரஸ் தாக்குதலை தடுக்க டிஜிட்டல் எறும்புகள்

கம்ப்யூட்டர்களில் ஏற்படும் வைரஸ் தாக்குதல்கள் போன்றவற்றை கட்டுப்படுத்தி அழிக்க, புதிதாக, டிஜிட்டல் எறும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள் ளன.என்ன வியப்பாக இருக்கிறதா, உண்மை தான். கம்ப்யூட்டர் உலகில் எதுவும் சாத்தியம் தான்.

இதுகுறித்து, கணினி அறிவியல் துறை பேராசிரியர் எரின் பல்ப் கூறியதாவது:

சாதாரணமாக, ஒரு இடத்தில் உணவுப் பொருட்களை கண்டறிந்தால், அந்த இடத்தில், எறும்புகள் அனைத்தும், கூட்டாக ஒன்று சேர்ந்து விடும். அதேபோல், ஆபத்து என்றாலும், அந்த இடத்தில் கூட்டமாக சேர்ந்து, தங்கள் எதிரியை அழித்துவிடும் இயல்பு கொண்டது எறும்புகள்.இந்த டெக்னிக்கை பாதுகாப்புக்காக, கம்ப் யூட்டர் துறையிலும் பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.அந்த எண்ணத்தின் அடிப்படையில் உருவானது தான், டிஜிட்டல் எறும்புகள்.கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் ஏற்படும், அச்சுறுத்தல்களை சமாளிக்க, பல்வேறு வகையான டிஜிட்டல் எறும்புகள் உருவாக்கப்பட்டன.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, விஞ் ஞானி கிளென் பிங்க் கூறுகையில்,

"டிஜிட்டல் எறும்புகள், கம்ப்யூட்டர் நெட் வொர்க்கில் நகர்ந்து செல்லும் போது, டிஜிட்டல் அடையாளங் களை விட்டு செல்லும். இந்த டிஜிட்டல் அடையாளங்கள் மூலம், எறும்புகள் ஒன்றன் பின், மற்றொன்று என பின்பற்றி செல்லும்."எறும்புகளை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் அமைப்பு, வழக்கமான பாதுகாப்பு முறையை விட வேகமாக செயல்படும். இவை, புதிய தொற்றுக்களை கண்டறியும் வகையில் முறையான இடைவெளியில், அடிக்கடி மேம்படுத்தப்படும்."இது கம்ப்யூட்டரில் ஏற்படும் தொற்றுக்களை அழிக்கும் வகையில், புரோக்கிராம் செய்யப் பட்டது' என்றார்.

'நானோ தொழில் நுட்பத்தினால் மரணத்தை வெல்ல முடியும்'

இன்னும் 20 ஆண்டுகளில், நானோ டெக்னாலஜியின் மூலம் மனிதன் மரணமடையாத நிலையை அடைய முடியும், என பிரிட்டன் விஞ் ஞானி தெரிவித்துள்ளார்.

தற்போது எந்த துறையை எடுத்தாலும், நானோ டெக்னாலஜி பற்றி பேசப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் படைக்கப்படுகின்றன. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமது உடலில் பழுதடையும் பாகத்தை மாற்றியமைக்க செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு வயோதிகம் ஏற்படுவதை தடுக்கவும் முடியும். முடிவில் மரணமே ஏற்படாமல் செய்யவும் முடியும், என்கிறார் பிரிட்டன் விஞ்ஞானி ரே குர்ஸ்வீல்.ரத்தத்தில் உள்ள செல்களின் பரப்பளவு கொண்ட "நானோ போட்' என்ற பொருள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த நானோபோட்டை பயன்படுத்தி கட்டியை அழிக்கலாம்; உடம்பில் துளையிடாமலேயே அறுவை சிகிச்சை செய்யலாம்; ரத்தம் உறைவதை தடுக்கலாம்.

இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்காலத்தில் மரணமே ஏற்படாதவாறு செய்ய முடியும். இந்த தொழில்நுட்பத்தினால் மூளையின் திறனையும் அதிகரிக்க செய்ய முடியும். ஒரு நிமிடத்தில் ஒரு புத்தகத்தை முழுவதுமாக படிக்கவும் முடியும்.நானோ தொழில்நுட்பத்தின் மூலம் செயற்கை கண்களும், செயற்கை உறுப்புகளும் கூட உருவாக்க முடியும், என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இவ்வாறு ரே குர்ஸ்வீல் தெரிவித்துள்ளார்.

'மிஸ்டு கால்...!'கொடுப்பவரா நீங்கள்; உஷார்: உளவுத்துறை கண்காணிக்கும்

மொபைல் போனில் "மிஸ்டு கால்' தரும் பழக்கம் உள்ளவரா, இனி உஷாராக இருங்கள்; உளவுத்துறை கண்காணிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், பாக்., பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கண்டுபிடித்து, அவர்களின் சதித் திட்டங்களை உடனுக்குடன் ஒடுக்க, மத்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நவீன தகவல் தொடர்பு தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சதி திட்டங்களை செயல்படுத்துகின்றனர். தகவல் தொடர்புகளை துண்டித் தாலே, பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை ஒடுக்கி விட முடியும் என்று, உளவுத்துறை நம்புகிறது. மொபைல் போன், இன்டர்நெட் மூலம் பயங்கரவாதிகள் தொடர்பு கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து விட்டது. இன்டர்நெட் மூலம் பயங்கரவாதிகள் தகவல்களை பரிமாறிக் கொள்வதை கண்காணிக்க, உள வுத்துறை ஏற்பாடு செய்துள் ளது. இதனால், இன்டர்நெட் வழியாக சதித் திட்டங்களை தீட்டுவதை ஓரளவு முறியடித்து வருகிறது.

மொபைல் போன் மூலம், பயங்கரவாதிகள் தொடர்பு கொள் வதைத் தடுக்க, ஏற்கனவே நடவடிக்கை எடுக்க உளவுத்துறை ஆரம் பித்து விட்டது. முதல் கட்டமாக, போலி மொபைல் போன்கள் விற்பனை செய்வதை தடுத்தது. அடுத்து,போலி மொபைல் போன் இணைப்புகளையும் துண்டிக்க திட்டமிட்டு உள்ளது. மொபைல் போன்களில், "இன்டர்நேஷனல் மொபைல் எக்விப்மென்ட் ஐடென்டிபிகேஷன்' (ஐ.எம்.இ.ஐ.,) என்ற எண் இருக்கும். இந்த எண், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் தனித்தனியாக இருக்கும். இதை வைத்துத் தான் குறிப்பிட்ட மொபைல் போனில் இருந்து தகவல் பரிமாறப்பட்டுள்ளது என்பதை, கண்காணிக்க முடியும்.

ஆனால் சீனா, தென் கொரியாவில் இருந்து போலி மொபைல் போன்கள், இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கணக் கான போன்களுக்கு, ஒரே ஐ.எம். இ.ஐ., எண் தரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி ஒரே எண், பல மொபைல் போன்களுக்கு அளிக் கப்படுவது, பயங்கரவாதிகளுக்கு வசதியாகப் போய் விட்டது. சீன, கொரிய மொபைல் போன்களை பயன் படுத்திய பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க முடியாமல் போனதால், உளவுத்துறை இதற்கு தடை விதித்தது. இந்த தடை வரும் டிசம்பர் 1ல் இருந்து அமலுக்கு வருகிறது. இந்த நிலையில், அடுத்த அதிரடியாக "மிஸ்டு கால்'களை எல் லாம் கண்காணிக்க உளவுத்துறை முடிவு செய்துள்ளது.

எல்லா "மிஸ்டு கால்'களையும் பதிவு செய்து அளிக்கும்படி, அரசு மற்றும் தனியார் மொபைல் இணைப்பு நிறுவனங்களுக்கு உத் தரவு அனுப்பும்படி, தொலைபேசித்துறையை கேட்டுக்கொண்டது. மொபைல் போனில் பேசினால் தான் காசு வசூலிக்க முடியும். அதனால், அந்த அழைப்புகளை மட்டும், எல்லா மொபைல் நிறுவனங்களும் பதிவு செய்து வருகின்றன. ஆனால், "மிஸ்டு கால்'களுக்கு காசு வசூலிக்கப்படுவதில்லை என்பதால், அவற்றை நிறுவனங்கள் பதிவு செய்வதில்லை. மொபைல் போனில் "மிஸ்டு கால்' விடுவோர் தான் அதிகம்.

100 அழைப்புகளில் 80 அழைப்புகள் "மிஸ்டு கால்' தான். 25 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கடைக்காரர்கள், விற்பனை பிரதிநிதிகள், டிரைவர்கள் போன்றவர்களும் "மிஸ்டு கால்' அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு "மிஸ்டு கால்' அனுப்பினால், தங்களுக்கு செலவு மிச்சம் என்று இப்படி செய்கின்றனர். "இப்படி 80 சதவீத "மிஸ்டு கால்'களை பதிவு செய்தால், அதற்கான டிஜிட்டல் சாதன செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும். இதனால், நிறுவனத்துக்கு இழப்பு தான்' என்று, தனியார் மொபைல் இணைப்பு நிறுவனங்கள் புலம்புகின்றன.

உளவுத்துறைக்கு தொலைபேசித்துறையும் இது தொடர்பாக விளக்கி, "சந்தேகப்படும்படியான மிஸ்டு கால்களை சொன்னால், உடனே பதிவு செய்வதாக நிறுவனங்கள் உறுதி கூறியுள்ளதாக தெரிவித்துள்ளது.எனினும், "எல்லா மிஸ்டு கால் களையும் பதிவு செய்தால் தான் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்' என்று, உளவுத்துறை வலியுறுத்தி வருகிறது. "மிஸ்டு கால்'களை பதிவு செய்வது விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.

தினமும் அரை கிலோ மண்: தியாகதுருகம் வாலிபரின் உணவு

கள்ளக்குறிச்சி: "நாளுக்கு நாள் மண் திண்ணும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, ஒரு நாளைக்கு அரை கிலோ மண்ணை சாப்பிடும் காய்கறி கடை வியாபாரி கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த வாலி மகன் கோபி(25); காய்கறி வியாபாரி. மூன்று வயதில் மண்ணை சாப்பிட ஆரம்பித்தவர் தற்போது 25 வயதிலும் மண் சாப்பிட்டு வருகிறார். இடையில் களிமண், ஆற்று மணல் போன்றவற்றையும் ருசித்து சாப்பிட்டு வருகிறார். தினமும் அரை கிலோவுக்கு மேலாக மண்ணை உணவாக உட்கொள்கிறார். எப்போது பார்த்தாலும் இவர் பேண்ட் பாக்கெட்களில் குறைந்த பட்சம் கால் கிலோவிற்கு மண்ணை சேமித்து வைத்து நாள் முழுவதும் சாப்பிட்டு வருகிறார்.

மணலை சாப்பிடும் போது மணலில் பெரிய கற்கள் இருந்தால் மட்டும் முடிவில் அவற்றை கீழே துப்பிவிடுகிறார். ஏரி களி மண்ணை மிகவும் விரும்பி சாப்பிடுகிறார். இது குறித்து அவர் கூறுகையில், "சிறு வயதில் இருந்து மண்ணை உணவாக சாப்பிடும் பழக்கம் உள்ளது. சிறு வயதில் குறைவான மண்ணை சாப்பிட்டு வந்தேன். பின், தினமும் அதிகமான மண்ணை சாப்பிட்டு வருகிறேன். இதனால் எனது உடம்பிற்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டதில்லை. மேலும், மண்ணை சாப்பிடுவதால் இயற்கை உபாதைகளிலும் இதுவரை எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு நாளுக்கு நாள் மண் சாப்பிடும் ஆர்வம் அதிகரித்து வருகிறதே தவிர குறையவில்லை' என, மண்ணை சாப்பிட்டு கொண்டே கூலாக தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் தண்டனை

மதுரையில் சொத்துத் தகராறு காரணமாக, ஐ.டி.ஐ., படித்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு ஆயுள் சிறை தண்டனை, 44 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோர்ட் உத்தரவிட்டது.

மதுரை புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விவசாயி ராசுத்தேவர். புதுப்பட்டி கொட்டகைமேட்டை சேர்ந்தவர் விவசாயி மாயாண்டி (63). ராசுத்தேவருக்கு சொந்தமான ஏழரை சென்ட் நிலம், கொட்டகைமேட்டில் உள்ளது. இந்த நிலம் தனக்கு சொந்தமானது என, மாயாண்டி பிரச்னை செய்தார். இவ்வழக்கு மதுரை முன்சீப் கோர்ட்டில் நடந்தது. ராசுத்தேவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மாவட்ட கோர்ட்டில் மாயாண்டி அப்பீல் செய்தார்.

இதிலும் ராசுத்தேவருக்கு ஆதரவாக தீர்ப்பானது. இதையடுத்து, நிலத்தை சுத்தம் செய்து விட்டு 2006 செப்., 14ல், பகல் 12 மணியளவில் ராசுத்தேவர், அவரது மகன் பன்னீர்செல்வம் (22) (ஐ.டி.ஐ., படித்தவர்) மற்றும் உறவினர்கள் இரண்டு ஆட்டோ, பைக்கில் வீடு திரும்பினர். புதுப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, ஆட்டோவை வழிமறித்த மாயாண்டி, அவரது மகன்கள் சந்தானம் (36), ராஜா (28), மூர்த்தி (27), கண்ணன் (23), சந்தானம் மனைவி சித்ரா (33), ராஜா மனைவி முத்துமாரி (23), மாயாண்டி மனைவி அம்மாசி (58) ஆகியோர், பன்னீர்செல்வத்தை அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயமடைந்த பன்னீர்செல்வம் பஸ் ஸ்டாப் அருகில் இருந்த பாண்டி என்பரின் டீ கடைக்குள் தஞ்சம் புகுந்தார். உள்ளே புகுந்து பன்னீர்செல்வத்தை வெட்டிக் கொன்றனர். ராசுத்தேவர் புகார்படி மாயாண்டி, அவரது மனைவி, மகன்கள், மருமகள்களை ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் கைது செய்தார்.இவ்வழக்கு, மதுரை இரண்டாவது விரைவு கோர்ட்டில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் பி. அன்புசெல்வன் ஆஜரானார். மாயாண்டி, சந்தானம், ராஜா, மூர்த்தி, கண்ணன், சித்ரா, முத்துமாரி, அம்மாசி ஆகியோருக்கு ஆயுள் சிறை தண்டனை, 44 ஆயிரம் ரூபாய் அபராதம், அபராதத் தொகையில் 20 ஆயிரம் ரூபாயை ராசுத்தேவருக்கு வழங்கும்படி நீதிபதி ஆர். ராதா உத்தரவிட்டார்.