சர்க்கரை மூலம் காரையும் இயக்கலாம்

காபியில் போடும் சர்க்கரை மூலம் காரை ஓட்டலாம்! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை தான். காரை இயக்க தேவைப்படும் ஹைட்ரஜன் எரிபொருளை, சர்க்கரையில் இருந்து உருவாக்கி, அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். அமெரிக்காவில், வெர்ஜினியா டெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி பெர்சிவால் ஜாங் தலைமையிலான குழுவினர், இந்த ஆய்வில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இது குறித்து ஜாங் கூறியதாவது: ஆய்வு கூடத்தில், 13 வகையான என்சைம்கள் (புளிக்க செய்யும் பொருள்), தண்ணீர் மற்றும் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட சர்க்கரை ஆகியவற்றை ஒன்று சேர்த்து, 86 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் சூடேற்றிய போது, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடிந்தது.

ஹைட்ரஜனை கொண்டு கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்க முடியும். ஆனால், குறைந்த செலவில், ஹைட்ரஜனை உற்பத்தி செய்வது எப்படி?, சேமித்து வைப்பது எப்படி?, வினியோகம் செய்வது எப்படி போன்ற கேள்விகளுக்கு தான் இதுநாள் வரை பதில் கிடைக்கவில்லை. தற்போது குறைந்த செலவில், சர்க்கரையை கொண்டு, ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது புரட்சிகரமான கண்டுபிடிப்பு.

ஆனால், ஆய்வு கூடத்தில், குறைந்த அளவு ஹைட்ரஜனை தான் உற்பத்தி செய்ய முடிந்தது. வர்த்தக ரீதியாக பயன்படுத்தும் வகையில், அதிக அளவில் உற்பத்தி செய்யும் வழிவகை இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை. அதே போல, ஹைட்ரஜனை கொண்டு இயக்கப்படும் வாகனம் எந்த அளவுக்கு வேகத்தில் செல்லும் என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், சர்க்கரையால் உற்பத்தி செய்யப்பட்ட எரிபொருளை கொண்டு, காரை இயக்குவது பாதுகாப்பானது; சுற்று சூழலுக்கு அதிக கேடும் ஏற்படுத்தாது . பெட்ரோல் மற்றும் டீசலை விட, ஹைட்ரஜன் விலை குறைவாகவே இருக்கும். இவ்வாறு விஞ்ஞானி ஜாங் கூறினார்.

No comments:

Post a Comment