ஹாலிவுட் தரத்தில் யோகி : அமீர் பெருமிதம்


சுப்பிரமணியசிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் யோகி படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக டைரக்டரும், நடிகருமான அமீர் பெருமிதம் பொங்க கூறியிருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி:

சென்னையில் உள்ள குடிசை பகுதிதான் யோகி படத்தின் கதைக்களம். அங்கு வசிக்கும் யோகேஷ்வரன் என்கிற யோகி இளைஞனின் உணர்வுகள்தான் கதை. சென்னைவாசிகள் பற்றி இதற்கு முன் சில படங்கள் வந்திருந்தாலும் யோகியில் பார்க்கப்போகும் களம் புதுசாக இருக்கும். எட்டுக்கு எட்டு அறையில் அவர்கள் நடத்தும் வாழ்க்கையே தனி படமாக எடுக்கும் அளவுக்கு சுவாரஸ்யம் இருக்கிறது. பசி எடுக்குதுன்னு ‌தெரிஞ்சா சூழ்நிலை, சுற்றியிருக்கும் மனிதர்கள் என எதையும் யோசிக்காமல் அடித்து, பிடுங்கி சாப்பிடும் கேரக்டர்தான் யோகி.

இயக்குனரா கேமராவுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த எனக்கு கேமராவுக்கு முன்னாடி நிக்குற அனுபவம் புதுசாத்தான் தெரிந்தது. எல்லாத்தையும் வேலை வாங்கியபோது நடிகர்களின் சிரமங்கள் அவ்வளவா தெரியாது. இப்போ நானே களத்தில் நின்றபோதுதான் அதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது.

யோகிக்காக உடல் ரீதியா நிறைய சிரமங்களை எடுத்துருக்கேன். மூணு வேளையும் அசைவம் சாப்பிடுற ஆளு நான். யோகிக்காக தினமும் பச்சை காய்கறி, அவித்த முட்டையில் வெள்ளை கரு மட்டும்னு என்னோட மெனு பத்தியமாகி, மூலிகை வைத்தியர் வீட்டுல இருக்கிறமாதிரி பீலிங் வந்திடுச்சு. ஜிம்முக்கு போய் உடலை இறுக்கிக் கிட்டேன். ஹாலிவுட் தரத்துக்கு சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளோம். இரண்டு சண்டை காட்சிகளை மட்டும் படமாக்குறதுக்கு 51 நாட்கள் ஆனது. டூப் போடாமல் நடித்ததால் 2 தடவை அடி பட்டிடுச்சு.

படத்துல இன்னொரு ஹைலைட்டா யுவனோட இசையை சொல்லலாம். என்னுடை படங்களுக்கு இசையமைக்கும்போது மட்டும் மாடர்ன் இளையராஜாவா மாறிடுவார் யுவன். யோகி படத்துல மொத்தம் நாலு பாட்டு. அதில் ஒன்று பிரமோஷன் பாட்டு. நானும் ஒரு பாட்டு பாடிருக்கேன். யோகி படம் வந்த பிறகு டைரக்டர் சுப்பிரமணிய சிவா இன்னொரு கோணத்தில் தெரிவார். அந்த அளவுக்கு யோகி ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.

இவ்வாறு அமீர் கூறினார்.

படத்துல மெசேஜ் ஏதும் சொல்றீங்களா? என்று அமீரிடம் கேட்டதற்கு, மெசேஜ் சொல்றதுக்காக சினிமா எடுக்கக் கூடாது. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம். இதில் அட்வைஸ் சொல்லக்கூடாது, என்று மினி லெட்ஜரே எடுத்து விட்டார்.

No comments:

Post a Comment