வேலு பிரபாகரனின் "காதல் கதை "


சொத சொதன்னு கதை சொல்றவங்களுக்கு மத்தியிலே, வேலு பிரபாகரன் சொல்ற இந்த காதல் கதை இருக்கே, \'கண் கொள்ளா(?)\' மிரட்சி.

குளோஸ் அப்பில் வந்து அவுத்து போடுவதை பற்றி லெக்சர் அடிக்கும் வேலு பிரபாகரன், \"ஆம்பளைங்க இதையெல்லாம் பார்த்துதான் காமுர்றான்...\" என்று கவலைப்படும்போது க்ளுக்கென்று சிரிப்பு வருகிறது. படத்தில் வரும் மூன்று பெண்களும், ஐயனாருக்கு நேர்ந்துவிடப்பட்ட ஆடு மாதிரியே அசைவ விருந்துக்கு தயாராகியிருக்கிறார்கள். அதிலும் இவர்கள் காட்டும் சதை புரட்சி, \'போன்லெஸ்\' கொண்டாட்டம்.

ஷெர்லிதாஸ், சரத் செந்தில் இருவரின் காதலையும் மையப்படுத்திதான் கதையை எடுத்திருப்பார் போலிருக்கிறது. பின்பு இடைச்செருகலாக வேலு பிரபாகரனும் நடித்திருக்கணும். தாமரை இல்லை தண்ணீர் போல தனித்தனியாக ஒட்டாமல் இருக்கிறது இவ்விரு கதைகளும். அதெல்லாமா முக்கியம்? வாங்குன காசுக்கு மேலே காட்றாங்கப்பா... என்ற காமெண்ட்தானே!

ஷெர்லிதாசின் மற்றவைகளை விட அந்த கண்கள் மிரட்டல். துணியை பற்றி கவலைப்படாத துணிச்சல்காரியாக இருக்கிறார். தமிழ்சினிமா வரலாற்றிலேயே... என்று எவராவது எழுத முன் வந்தால், அதில் கட்டாயம் ஷெர்லி இருப்பார். இவர் முன்னாள் எம்எல்ஏ பையனை காதலித்துவிட்டு அநியாயமாக செத்துப் போவது பரிதாபம். இன்னொரு விருந்து, வாத்தியார் -வேலைக்காரி இடையேயான காதல். ஒரு வாத்தியார் எப்படியெல்லாம் இருக்கக் கூடாதோ அப்படியெல்லாம் இருக்கிறார் இவர். வேலைக்காரியை மடக்க இவர் போடும் தேள் கடி திட்டம், தேக்கடிக்கு விசிட் அடித்த மாதிரி அத்தனை கூல்!

கோவாவில் நின்று கொண்டு, \"அங்க பாருங்க. அந்த பெண்கள் எல்லாம் திறந்து போட்டுட்டு நிக்கிறாங்க. பக்கத்திலே இருக்கிற ஆண்கள் எதைப் பற்றியாவது கவலைப்படுறாங்களா? அவங்க பாட்டுக்கு விளையாடிட்டு இருக்காங்க பாருங்க\" என்று வேலு பிரபாகரன் வசனம் பேசுகிற புண்ணியத்தில் வெள்ளைக்காரிங்க மேலேயும் கேமிரா மேய்ந்திருக்கிறது.

ஆண்களை போலவே பெண்களும் அரை நிர்வாண கோலத்தில் அலையணும் என்கிற வேலுபிரபாகரனின் கொள்கை திகைக்க வைக்கிறது. சே, இப்படியா ஆபாசமா திரியுறது? என்று சில போட்டோக்களை போட்டு அவற்றை கண்டிப்பது போல வியாபாரம் செய்யும் சஞ்சிகை தந்திரங்களில் ஒன்றுதான் இதுவும்.

நாலே நாலு கேள்வி கேட்பதற்குள் வேலுபிரபாகரன் மேல் காதல் வயப்படும் அந்த நிருபியும், அவருக்கான பிரபாகரனின் பதிலும் தியேட்டரில் பெருஞ்சிரிப்பை வரவழைக்கிறது.

வேதா செல்வத்தின் ஒளிப்பதிவில் நிரம்ப \'ஏ\'க்கம். அக்கம் பக்கம் பார்க்காமல் இளையராஜா அவரது வேலையை அசத்தலாக செய்து முடித்திருக்கிறார்.

வேலுபிரபாகரனின் காதல் \'சதை!\'

No comments:

Post a Comment