புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில் ஆண்டு இல்லாததால் குழப்பம்

அவலூர்பேட்டை: மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில், ஆண்டு குறிப்பிடாததால் மக்கள் குழப்பமடைந்துள்ளனர். அரசர் காலங்களில் தங்கம், வெள்ளி, செப்பு, பித்தளை போன்ற உலோகங்களில் நாணயங்கள் அச்சடிக்கும் வழக்கம் இருந்தது. மக்களாட்சி துவங்கியதும், மத்திய அரசின் ஒப்புதலுடன் ரிசர்வ் வங்கி சார்பில், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

 நாணயங்கள், பித்தளை, நிக்கல், அலுமினியம் உலோகங்களில் அச்சிடப்படுகின்றன. ரூபாய் நோட்டுகள், காகிதங்களில் அச்சிடப்படுகின்றன. சமீபத்தில், புதிதாக ஒன்று, இரண்டு, ஐந்து மற்றும் 10 ரூபாய் நாணயங்களை, மத்திய அரசு வெளியிட்டது. புதிய நாணயங்கள் மிக சிறிய அளவில் காணப்படுவதால், பழைய ஐம்பது காசுக்கும், புதிய ஐந்து ரூபாய்க்கும் வேறுபாடு தெரியாமல் உள்ளது. இது, பல பிரச்னைகளை உருவாக்குகிறது. மளிகைக் கடை முதல், பஸ் கண்டக்டர் வரை அனைவரிடமும் சண்டை போடும் நிலை ஏற்படுகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள புதிய ஐந்து ரூபாய் நாணயத்தில், மகாத்மா பசவேஸ்வரா உருவம், பெயர் காணப்படுகிறது. அவரது உருவத்தைச் சுற்றி இந்தியில், "பக்தி காயத் தாசோக் சம்தா' என வாசகம் உள்ளது. எந்த காலத்தைச் சேர்ந்த நாணயமென அறிந்து கொள்ள, ஆண்டு குறிப்பிடுவது வழக்கம். ஆனால், இந்த நாணயத்தில் ஆண்டு குறிப்பிடாததால், பொதுமக்கள் பலரும் குழப்பமடைந்துள்ளனர். எனவே, அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில், ஒன்றுக்கொன்று வித்தியாசங்களுடன் நாணயங்களை, மத்திய அரசு வெளியிட வேண்டும்.

No comments:

Post a Comment