ரூ. 10,000 கோடியில் என்எல்சி திட்டங்கள்

தமிழகம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் செயல்படுத்தி வருவதாக அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.ஆர். அன்சாரி தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் மழை உள்ளிட்ட பாதிப்புகளால் எல்.எல்.சி நிறுவனம் பாதிப்புக்குள்ளான நிலையிலும், பெரிய அளவில் நிறுவனத்தின் லாபம் பாதிக்கப்படவில்லை என்று சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெரிவித்தார்.


சென்ற நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய நிறுவனத்தின் நிகர லாபம் 821.09 கோடி ரூபாயாக இருந்தது என்றும், கடந்த நிதியாண்டில் பல புதிய சாதனைகளையும் படைத்ததாக அவர் கூறினார்.

கடந்த நவம்பர் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மழை பெய்ததால், பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் என்.எல்.சி நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைய முடியாமல் போனதாகவும், அதன்மூலம் மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.

கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 354 கோடியே 91 லட்சம் ரூபாய் மொத்த வர்த்தகம் மேற்கொண்டுள்ளது.

2008-09ஆம் நிதியாண்டிற்கான பங்கு ஈவுத்தொகையாக பங்கு ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் பங்குதாரர்களுக்கு வழங்க என்.எல்.சி. இயக்குனர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ரூ. 335 கோடியே 54 லட்சம் வழங்கப்படும்.

நடப்பு நிதியாண்டின் முதல் 3 மாத காலத்தில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. வானிலை வழக்கமான ஒத்துழைப்பை அளிக்குபட்சத்தில், கடந்த ஆண்டைக்காட்டிலும் நடப்பாண்டில் என்எல்சி அதிக லாபத்தை ஈட்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தைப் பொருத்தவரை நெய்வேலியில் 2ஆம் அனல்மின் நிலைய விரிவாக்கம், ராஜஸ்தான் மாநிலத்தின் பர்சிங்சார் சுரங்கத் திட்டம், அனல்மின் திட்டம், தூத்துக்குடி மின்திட்டம் போன்றவற்றால் குறிப்பிடத்தக்க அளவு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அன்சாரி கூறினார்.

தமிழகத்தின் ஜெயங்கொண்டம் பகுதியில் ஆண்டிற்கு 135 டன் பழுப்பு நிலக்கரி மற்றும் 1,600 மெகாவாட் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான பணிகளில் என்எல்.சி ஈடுபட்டுள்ளதாகவும், இதற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

தவிர உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், ஒரிசா, குஜராத் மாநிலங்களிள் சுமார் 11 ஆயிரம் மெகாவட் மின் உற்பத்தி செய்யக்கூடிய திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் கூறினார்.

பேட்டியின் போது என்.எல்.சி நிறுவனத்தின் இயக்குனர்கள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment