ஈரோடு வனப்பகுதியில் வற‌‌ண்டு போன அருவிகள்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி அடுத்து திம்பம், ஆசனூர்,அந்தியூர், தாளவாடி, கேர்மாளம் என கர்நாடாக மாநிலம் எல்லை வரையில் முழுவதுமாக வனப்பகுதியால் சூழப்பட்டதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனப்பகுதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வனப்பகுதியில் காட்டுயானை, காட்டெருமை, புலி,சிறுத்தை, கரடி, செந்நாய், மான் என அனைத்து விதமான விலங்குகளும் அதிகமாக வசிக்கின்றது.

இதனால் சத்தியமங்கலம் வனப்பகுதியில் பெரும்பான்மையான பகுதிகளை அதாவது தலமலை, கடம்பூர், பவானிசாகர் வனப்பகுதிகளை தமிழக அரசு வனவிலங்குகள் சரணாலயமாக அறிவித்துள்ளது. இதன்பின்னர் வனத்துறையினர் ரோந்துபணியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம் வனப்பகுதி எப்போதும் பார்ப்பதற்கு பசுமையாகவும் வனப்பகுதிக்குள் இருக்கும் ஓடைகளில் எப்போதும் சல, சல என அள்ளி இறைத்த வெள்ளிகாசுகளாய் தண்ணீர் சென்றுகொண்டிருக்கும். இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த காட்சியை கண்குளிர ரசித்து செல்வது வழக்கம். மேலும் தென்றல் காற்று சிலு, சிலு வென்று மேனியை உரசி செல்வது திம்பம் மலைப்பகுதியின் சிறப்பாகும்.

கடல்மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரம் கொண்ட திம்பம் மலைப்பகுதியை சென்றடைய பண்ணாரியில் இருந்து பத்து கி.மீ. தூரம் இருபத்தி ஏழு கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்லவேண்டும். நடப்பு ஆண்டில் போதிய மழை இல்லாத காரணத்தால் சத்தியமங்கலம் வனப்பகுதி முழுவதும் காய்ந்துபோகும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டது.

அதன்பிறகு திடீரென சில தினங்கள் மழை பெய்ததால் வறண்ட வனப்பகுதி சற்று வளம் பெற்றது. ஆனால் வன ஓடையில் தண்ணீர் செல்லும் அளவு மழை இல்லாததால் வனப்பகுதிக்குள் இருக்கும் ஓடைகள், அருவிகள் வறண்டு காணப்படுகிறது. மேலும் வழக்கமாக இருக்கும் குளிர்ந்த பனிகாற்று இப்பகுதியில் இல்லாததாலும் வழியில் உள் அருவிகளும் வறண்டு போனதால் இந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தற்போது மகிழ்ச்சி இழந்தே காணப்படுகின்றனர்.

No comments:

Post a Comment