மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: வைகோ

மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட மதிமுக செயல்வீரர் கூட்டத்தில் பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக கட்சியை அழிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி இன்று வரை ஈடுபட்டு வருவது அனைவருக்கும் தெரியும்.

மதிமுகவை அழிக்க சேலத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எங்களை அழிக்க நினைத்த கருணாநிதி தோற்றுப் போனார். ஆனால் எந்த ஒரு காலகட்டத்திலும் அதிமுக எங்களை அழிக்க நினைக்கவில்லை. மதிமுகவை யாராலும் அழிக்க முடியாது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க ரூ.50 கோடி தேவைப்பட்டு இருக்கிறது. 11 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்று இருக்கிறோம். கவுரவமான தோல்வியைத்தான் நாங்கள் பெற்று இருக்கிறோம். எனவே, தோல்வியடைந்து விட்டோம் என்று வருத்தப்படவில்லை.

புலிகள் தோற்று விட்டார்களே என்ற கவலைத்தான் இருந்தது. அவர்கள் தொடர்ந்து யுத்தத்தை நடத்துவார்கள். பிரபாகரன் உயிருடன்தான் இருக்கிறார். புலிகளை அழிக்க முடியாது. உள்ளத்தில் உறுதியுடனும், லட்சியத்தில் உறுதியுடனும் இருந்து தொடர்ந்து போராடுவோம்.

12 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க.பெற்ற ஓட்டுக்களை விட அ.தி.மு.க. அதிகம் பெற்று இருக்கிறது. வரும் பொது தேர்தலில் எத்தனை கோடி கொடுத்தாலும் அ.தி.மு.க. அணி வெற்றி பெறும். தேர்தலில் பணநாயகம் நடந்ததால் தி.மு.க. வெற்றி பெற்றது. வரும் தேர்தலில் இது நடக்காது என்றார்.

No comments:

Post a Comment